கணினி மையம்
600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கணினி மையம், டிஜிட்டல் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன கணினி உள்கட்டமைப்புடன் திகழ்கிறது. வளாகம் முழுவதும் 51 கணினிகளும், மையத்திற்குள் மட்டும் 40 கணினிகளும் உள்ள நிலையில், இக்கல்வி நிறுவனம் 1:10 என்ற மிகச்சிறந்த கணினி-மாணவர் விகிதத்தைப் பராமரித்து வருகிறது. இம்மையத்தில் LAN இணைப்பு வசதி, உரிமம் பெற்ற மென்பொருட்கள், மற்றும் அதிவேக இணைய வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. நூலகம், மென்திரைக்கூடம் (ஸ்மார்ட் வகுப்பறை), ஆசிரியர் அறை மற்றும் முதல்வர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் தனித்த கணினி அமைப்புகள் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. இம்மையம், மாணவர்கள் வலுவான டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், மின்-வளங்களை அணுகவும், தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடவும் பெரிதும் உதவுகிறது.
மொழிப் பயிற்றுக் கூடம்
மொழிப் பயிற்றுக் கூடம் – தகவல் தொடர்பு சிறப்பு மண்டலம்
720 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, குளிரூட்டப்பட்ட இந்த மொழிப் பயிற்றுக் கூடம் தமிழ் மற்றும் ஆங்கிலத் தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க இடமாகும். மேம்படுத்தப்பட்ட கணினிகள், 30 செவிப்பொறி மற்றும் கம்பியில்லா ஒலிவாங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஆய்வகம், கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றில் ஆழ்ந்த பயிற்சியை வழங்குகிறது. இந்த நவீன வசதி, கல்வி மற்றும் தொழில்முறை வெற்றிக்கு அவசியமான தன்னம்பிக்கை, சரளநிலை மற்றும் உலகளாவிய தகவல் தொடர்புத் திறன்களை மாணவர்கள் பெறுவதற்கு உதவுகிறது.
மென்திரைக்கூடம்
இக்கல்லூரியில், பாரம்பரியக் கற்பித்தலை ஒரு ஊடாடும் கற்றல் அனுபவமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட, இணைய வசதியுள்ள கணினி வசதிகளுடன் கூடிய, முழுமையாகக் குளிரூட்டப்பட்ட ஒரு மென்திரைக்கூடம் உள்ளது. பல்லூடக விளக்கக்காட்சிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் ஒலி-ஒளிக் கருவிகள் ஆகியவை பாடங்களை ஈடுபாடு மிக்கதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆக்கி, மாணவர்களின் புரிதலையும் பங்கேற்பையும் மேம்படுத்துகின்றன.
கருத்தரங்கக்கூடம்
நவீன முறையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட கருத்தரங்கக்கூடம், வளாகத்தின் கல்வி மற்றும் அறிவுசார் மையமாகத் திகழ்கிறது. இங்குப் பயிலரங்குகள், சிறப்பு விரிவுரைகள், வளாக நேர்காணல்கள், நூல் வெளியீடுகள், முன்னாள் மாணவர் சந்திப்புகள், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் மற்றும் கல்விசார் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இக்கூடம் அறிவுப் பகிர்விற்கான வாய்ப்பை ஊக்குவிக்கிறது.
அரங்கம்
500 பேர் அமரும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வள்ளல் பொன் பாண்டித்துரைத்தேவர் வைரவிழா அரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகள், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஒரு பிரம்மாண்டமான இடமாகத் திகழ்கிறது. நவீன ஒலி-ஒளி வசதிகளுடன் கூடிய இந்த அரங்கம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பெரிய அளவிலான கல்விசார் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தவும் ஒரு மிகச்சிறந்த மேடையை அமைத்துத் தருகிறது.
நூலகம்
வள்ளல் பொன். பாண்டித்துரைத்தேவர் அவர்கள் 1901இல் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் தலையாய உறுப்புக்களுள் ஒன்றாக பாண்டியன் நூலகத்தை நிறுவினார். தமிழ்மொழி, இலக்கியம், ஒப்பிலக்கியம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவ மாணவியருக்கும், தமிழார்வலர்களுக்கும், ஆய்வறிஞர்களுக்கும் பயன்படும் வகையில் நூலகம் செயல்பட்டு தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
1996ஆம் ஆண்டு தமிழக அரசால் ரூ.45 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உதவியினால் கட்டப்பட்ட பாண்டியன் நூலகமானது, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முகப்பு பகுதியில் தரைதளம் மற்றும் முதல் தளம் சேர்த்து சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
தமிழ்ச்சங்க நூலகம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நூல் ஆசிரியரின் பெயர், புத்தகத் தலைப்பு, புத்தகம் வெளிவந்த ஆண்டு, பதிப்பாளர் விபரம் மற்றும் பகுப்பு எண் என அனைத்து விபரங்களும் இங்கு கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் புத்தகத்தைப் பெறுவது என்பது எளிதாக்கப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடி பதிப்பு, நுண்பதிவு, மின்னணுவாக்கம் எனக் காலந்தோறும் தமிழ் நூல்கள் பிரசுரத்திலும், படியெடுத்தலிலும் நூலகம் பங்களிப்பினைச் செய்து வருகிறது. பொதுநூலக இயக்ககத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து இப்பாண்டியன் நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுவிட்டன. அவற்றை tamildigitallibrary.in என்னும் இணையதளத்திலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்ச் சங்க நூலகத்தில் கிடைக்கப் பெறாத தமிழ் நூல்கள் வேறு எங்கும் கிடைத்தல் அரிது என்று அனைவரும் கூறும் வகையில் 60,000 தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூலகம். நூல்கள் மட்டுமின்றி, 1500 ஆய்வேடுகளும், 200 குறுந்தகடுகளும், 200 பனையோலைச் சுவடிகளும், 7000 மின்-நூல்களும், 45 இதழ்களும் உள்ளடங்கிய அறிவுக்கருவூலமாகத் திகழ்ந்து வருகின்றது. நூற்றாண்டுப் பழமை வாய்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பாண்டியன் நூலகத்தில் உள்ளன.
செந்தமிழ்க் கல்லூரியில் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவியர், ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாது பிற பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் நூல்கள் பயன்படுத்துவதற்காகக் கொடுத்து வாங்கப்படுகின்றன. தமிழ்ச் சங்க நூல்கள் பார்வை நூல்களாகப் (Reference Books) பயன்படுத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
நூற்றாண்டு கடந்த ஆயிரக்கணக்கான நூல்கள், ஓலைச்சுவடிகள் எனப் பழமை ஒரு புறம், மின் நூல்கள், குறுந்தகடுகள், கணினிவழித் தேடல் என நவீனம் மறுபுறம் எனப் பழமையும் புதுமையும் ஒருங்கே கொண்டுள்ளது பாண்டியன் நூலகம்.
தமிழ்ச் சங்க நூலகத்தில் 19,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவற்றுள் சுமார் 7000 புத்தகங்கள் நூற்றாண்டுப் பழமையானவையாகவும் அரிய நூல்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல்கள் அக்காலம் தொட்டு இக்காலம் வரை வெளிவந்துள்ள குறிப்பிடத்தகுந்த நூல்கள் அனைத்தும் வாங்கி சேர்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் அறிஞர்கள் பலர் தாங்கள் பயன்படுத்திய நூல்களைத் தமிழ்ச்சங்க பாண்டியன் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இப்பாண்டியன் நூலகம் தனித்துறையாக இருந்தும் 60,000 தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும், 125 ஆண்டு காலப்பாரம்பரியம் மிக்கது என்பதும் மகிழ்ச்சிக்குரியது.